
"என்னங்க, இந்த சின்ன விஷயத்துக்காக ஏன் பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசரீங்க? ஏதாவது தப்பா பேசிருந்தா, என்ன மன்னிச்சிருங்க. சரி, பசியா இருப்பீங்க வந்து சாப்பிடுங்க."
"ஆமா, அது ஒன்னுதான் இப்ப குறைச்சல். நீயும் உன் புள்ளையும் சாப்பிடுங்க!" கோபமாக எழுந்து படுக்கைக்குச் சென்றான். மறுநாள் விடுமுறை என்பதால் இன்றாவது நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்துக் கொண்டான் கதிரவன். அதிகாலை சற்று நேரம் விழிப்பு வந்தது. படுக்கையில் மனைவியையும் குழந்தையையும் காணவில்லை. எழுந்து கீழே சென்று பார்த்தான். அம்மாவின் அரவணைப்பில் தரையில் உறங்கி கொண்டிருந்தான் சச்சின். "இவங்க ரெண்டு பேருக்கும் இதே ஒரு வேலை" என்று மனதில் புலம்பிக்கொண்டு, இருவரையும் நோக்கி நடந்தான். "இப்ப என்னாச்சுன்னு தரையில படுத்திருக்கீங்க ரெண்டு பேரும்?"
"ஒன்னு இல்லைங்க, மனசு சரியில்ல, புள்ளையும் அழுதுக்கிட்டு இருந்தான், அதான் இபப்டியே தூங்க வச்சிட்டேன்."
"இந்த வம்பே வேணாம், அவனுக்கு அப்புறம் காச்சல், சளின்னு வந்தா, அதுக்கும் நாந்தான் அங்க இங்கன்னு அலையணும். தயவு செஞ்சு மேல வந்து படுங்க ரெண்டு பேரும்!"
எப்பொழுதும் கோபத்தையும் சலிப்பையும் தம்மிடையே காட்டும் கணவரைத் தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று சசி வருந்தினாள்.அன்றிரவு முழுதும் உறக்கமே வரவில்லை அவளுக்கு. எப்படித்தான் தமது இல்லறத்தைச் சரிசெய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. எப்பொழுது பணம் என்பது கணவரின் குறிக்கோளாக மாறியதோ, அது முதல் அவருடைய போக்கும் மாறிவிட்டது. கண் கலங்கினாள் சசி. இறை நம்பிக்கை அதிகம் கொண்ட கதிரவன், இறைவனை வழிப்படும் அந்த ஐந்து நிமிடங்கள் மட்டுமே சாந்தமாக இருப்பான். வேலைச் சூழலினால் அவனது உள்ளச்சூழலிலும் மாற்றம் ஏற்பட்டு இருந்தது. தொடக்கத்தில், நல்ல கணவன் என்ற பட்டத்தைத் தற்காத்துக் கொண்டிருந்த கதிரவன், சச்சின் பிறந்த பிறகு, அந்த பட்டத்தை மெல்ல நழுவவிட ஆரம்பித்தான் கதிரவன். ஒருவரின் சம்பாத்யத்தில் மட்டும் குடும்பம் நடத்தவேண்டிய சூழ்நிலை அப்பொழுது. மகன் வளர வளர, அவன் மருத்துவம், படிப்பு, தேவைகள் என அனைத்துச் செலவினங்களும் கட்டுக்குள் அடங்காமல் போயின. அதனால், குடும்பத்துக்கு முக்கியத்துவம் செலுத்துவதைக் காட்டிலும், வேலைக்கு முக்கியத்துவம் செலுத்த தொடங்கினான் கதிரவன். அன்று முதல் இன்று வரை அவனது போக்கினால் சசி மனமுடைந்து போனாள். தாமும் வேலைக்குச் சென்று குடும்பத்திற்குப் பண உதவி செய்யலாம் என்றெண்ணி கதிரவனிடம் அதைப் பற்றி கூறிய போது, "வேண்டா சசி, அப்புறம் சச்சினை யார் பார்த்துக்கறது? வேலைக்காரியெ எல்லாம் எடுக்க முடியாது. நமக்கு இருக்கிற நிலைமைலெ இது வேற வேணுமா? எல்லாம் நான் பார்த்துக்கறேன், கவலை படாதே..." என்றான். பணத்தின் தேவை அதிகரிக்கும் போது குடும்ப சூழலும் உறவுகளும் இப்படி மாறுவார்களா என்றே வியந்தாள் சசி. கணவனையும் குற்றம் சொல்ல முடியாமல், கடவுளைக் கோபிக்க முடியாமல் அல்லாடி போனால் அந்த பெண்மனி.
காலை கதிரவனின் ஒளி முகத்தில் பளிச்சென பட்டது. துயில் கொண்டிருந்த கதிரவனும் படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தான். எப்பொழுதும் எழுந்ததுமே தனக்கு 'bed coffee' கொடுக்கும் மனைவியைக் காணவில்லை. காலையிலேயே சலிப்பு ஏற்பட்டது. 'சசி, சசி, எங்கெ இருக்க? எழுந்திருச்சு ரொம்ப நேரமாகுது. காப்பி எடுத்து வா" என்றான். வெகு நேரமாகியும் சசியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அன்றைய காலை பொழுது, எழும்போதே கதிரவனுக்குக் கோபத்தைக் கொடுத்தது. கதிரவன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ தெரியவில்லை. எப்போதே சூடாகவே இருந்தான் அவன். சலித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தவன், நேரே அடுப்பறைக்குச் சென்றான். வீட்டில் ஒரு வேலையும் ஆகவில்லை. போட்டவை போட்டப்படியே ஆங்காங்கே! "எங்குதான் சென்றாள் இவள்? கணவகுக்குக் காலையில் காப்பியும் கொடுக்கவில்லை; வீட்டு வேலைகளையும் முடிக்கவில்லை. என்ன தைரியம் இவளுக்கு? " என்று மனதுக்குள் ஆத்திரமடைந்தான் கதிரவன். அப்படியே வரவேற்பரைக்கு நடந்து சென்றான். வரவேற்பரையில் சாம்பிராணி வாசனை மூக்கைத் துளைத்தது. "ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டில் பூஜையா?" என்று யோசித்தவாறு சென்றவன் அங்கு தான் கண்ட காட்சியினால் அவன் தலையே சுற்றியது. வாய் பேச வரவில்லை. கைகள் நடுக்கங்கண்டன. சுற்றி முற்றி பார்த்தான். என்ன நடக்கிறது என்று குழம்பி போனான். தான் இங்கு நின்று கொண்டிருக்க, சவப்பெட்டியில் தன்னைப் போலவே ஓர் உருவம் இருக்கிறதே என்று வியந்தான். சவப்பெட்டியின் அருகே சென்றான். சவப்பெட்டியினுள் தானே இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான் கதிரவன். எப்படி இது நடந்தது. தான் உயிரோடு இருக்க, அனைவரும் இந்த பிம்பத்தைப் பார்த்து ஏமாந்து போவதேன் என்று குமுறினான். ஆனால், அவனுடைய குமுறல் யாருக்குமே கேட்கவில்லை. சவப்பெட்டியைப் பிடித்து சசி அழுதுக் கொண்டிருப்பதைக் கண்டான். அவள் அருகே சென்று அவள் கையைப் பிடிக்க முயற்சித்தான். உயிரற்ற உடல் என்ன செய்ய முடியும்? அவள் கையைப் பற்ற முடியவில்லை. தரையில் கிடந்து பிரண்டினான் கதிரவன். அவன் கண்கள் சச்சினைத் தேடின. சிறுபிள்ளைகளுக்குத்தான் ஆவிகள் கண்ணுக்குத் தெரியுமே என்ற அற்ப எண்ணம் அவனுக்கு. சச்சின் வீட்டின் ஒரு மூலையில், கன்னத்தில் கைவைத்தவாறு, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். பாவம், சிறுபிள்ளைக்கு என்ன தெரியும்? நடப்பதறியாது விழித்துக் கொண்டிருந்தான் சச்சின். "சச்சின், அப்பாவே பாருடா, அப்பா இங்கத்தான் இருக்கேன். அப்பா உன் கண்ணுக்குத் தெரியரேன்ல?" என்று கதிரவன் சச்சினிடம் கேட்டான். தன்னிடம் யாருமே பேசாதவாறே சச்சின் அமர்ந்திருந்தான். கதிரவன் திக்குதிசை தெரியாமல் அலைமோதினான். தன்னைக் கடந்துச் செல்லும் யாரும் தான் இங்கு நின்று கொண்டிருப்பதை அறியவே இல்லையே என்று அழுதான்.
"இறைவா, நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை இவ்வளவு சீக்கிரம் உன்னிடம் அழைத்துக் கொண்டாய்? ஒரு கணவனாய், ஒரு தந்தையாய் நான் செய்ய வேண்டிய கடமை இன்னும் எவ்வளவோ இருக்கிறதே? நான் இறக்கும் முன்னர் கூட என் மனைவி, குழந்தைகளிடம் அன்பாக ஓர் வார்த்தைக் கூட பேசவில்லையே. சசி என்மீது இன்னும் கோபமாக உள்ளாளா என்று கூட தெரியவில்லையே. என் சச்சின் நேற்றிரவு நன்றாக தூங்கினானா என்று கூட கேட்கமுடியவில்லையே. நான் இறந்தும் கூட என் மனம் வலிக்கிறதே. "இறைவா, மறுபடியும் வாழ எனக்கொரு வாய்ப்பு தருவாயா? மறுபடியும் என் வாழ்வின் நொடிகளைத் திரும்ப தருவாயா? என் மனைவியிடம், உன் சமையல் போன்று வேறெவரும்சமைக்க முடியாது என்று சொல்ல மறுபடியும் வாய்ப்பொன்று தருவாயா? என் மகன் சச்சினுடன் விளையாட மறுபடியும் ஒரு வாழ்க்கை தருவாயா இறைவா? என் கடமைகளைச் சரிவரச் செய்ய மறுபடியும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காதா?" என்று குமுறி குமுறி அழுதான் கதிரவன்.
அப்பொழுது தன் தோளை யாரோ தட்டி கொடுப்பதை உணர்ந்தான் கதிரவன். தன்னை யாரோ தொடுகிறார்கள், என்று ஒரு கணம் மகிழ்ந்தான். கண்விழித்துப் பார்க்கையில் தன் மனைவி சசி அருகில் அவன் தோளைப் பற்றிக்கொண்டு "என்னங்க ஆச்சு, ஏதாவது கெட்ட கனவா?" என்றாள். "இல்லம்மா, நல்ல கனவுதான், நல்ல புத்தி சொல்ற கனவு" என்றான் புன்னகைத்தவாறே...ஒன்றும் அறியாதவளாய் கணவனைப் பார்த்தாள் சசி. "இந்த உலகத்திலேயே, நீதான் அழகி, உன்னோட சமயல்னா எனக்கு உயிரு..." என்றான் கதிரவன். "என்னங்க இந்த நேரத்திலே இப்படி ஏன் ஏதேதோ சொல்றீங்க" "எந்த நேரத்துல சொல்றேன்றது முக்கியம் இல்ல, ஆனால் சொல்றதெல்லாம் உண்மை. என்ன மன்னிசிடு சசி. உன்ன நான் எவ்வளவோ திட்டியும், உன்னை பொருட்படுத்தாம இருந்தப்பவும் கூட, நீ என்னை கோவிச்சுக்கவே இல்ல. எனக்கு கடவுள் அந்த கனவைக் கொடுத்து நல்ல பாடம் சொல்லிக் கொடுத்துட்டாரு" "கணவன் சொல்வது புரியவில்லை என்றால் கூட, நடந்ததெல்லாம் பெருநன்மைக்கே என்று அகம் மகிழந்தாள் மனைவி. அன்று முதல் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதை கதிரவன் நன்கு உணர்ந்தான். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடையாதவன், எப்பொழுதுமே மகிழ்ச்சியடையவே மாட்டான் என்று புரிந்தவனாய் நடந்தான் கதிரவன். தன் மனைவியை ஒரு பொருட்டும் மதிக்காமல், பொருட்படுத்தாமல் இருந்த அவனுக்கு அந்த கனவு வராமல் இருந்திருந்தால், இறந்தப்பின்னும் நிம்மதியற்ற ஆன்மாவாய் அலைந்து திரிந்திருப்பான்.
20 வருடங்கள் கழிந்தன... மாரடைப்பால் உயிர்நீத்த கதிரவனின் ஆன்மா, வீட்டின் வெளியே உலாவிக்கொண்டு தன் மனைவியையும் பிள்ளையையும் பார்த்துக் கொண்டிருந்தது. 24 வயது நிரம்பிய தன் மகன் சச்சின், தன் தாயின் கரங்களை ஆறுதலாக பற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து அகம் மகிழ்ந்தது. தனக்கு பிறகு, தன் மனைவியையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்கிற அளவு தன் மகன் தலையெடுத்ததைக் கண்டு பெருமிதம் கொண்டான். தான் இல்லாமல், தன் குடும்பம் எப்படி வாழுமோ என்ற அச்ச உணர்வு இல்லாதவனாய்...சிறந்த கணவனாய், சிறந்த தந்தையாய் தனது கடமைகளைச் சரிவர, தவறாமல் செய்த கதிரவனுக்கு இறந்து விட்டோம் என்று ஒரு துளி கவலையும் இல்லை. தாம் இறந்தப்பின்பும் கூட, மனைவி மக்களுக்கு எந்தவித குறையும் சுமையும் இல்லை என்ற ஆறுதல் மனதை வருடியது. தகுந்த நேரத்தில் இறைவன் கொடுத்த அந்த கனவுக்காக நன்றிக்கூறி இறைவனடிச் சேர்ந்தது அந்த தூய ஆன்மா...!
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல கருத்தை சொல்லும் கதை... சொன்னால்தான் அன்பா என்று கேட்டு அன்பை வரவழைப்பதைவிட, அன்பை அந்தந்த நேரத்திலேயே வெளிப்படுத்தி பாருங்கள்... அதில் இருக்கும் இன்பமே தனிதான். அதிலும் அடுத்த நிமிஷம் உறுதி இல்லாத வாழ்க்கையில் இது அவசியமும்கூட... சிறந்ததொரு கதை... வாழ்த்துகள் உங்கள் எழுத்து பயணத்திற்கு...:)
ReplyDelete:) நன்றி கீதாஞ்சலி
ReplyDelete