Tuesday, 19 March 2013

துரோகம்...





துரோகம் என்றால் என்ன? திருமணமானப்பின் கணவன் வேறொரு பெண்ணைத் தேடி போவது, அல்லது மனைவி இன்னொரு ஆணுடன் உறவாடுவது. இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதைதான் நாம் துரோகம் என்று வகைப்படுத்துகிறோம். ஆனால் சின்ன விஷயங்கள் கூட துரோகம் என்றுதான் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு குட்டி கதை. விஜயும் கவிதாவும் மிக நெருங்கிய நண்பர்கள். கவிதா ராஜாவின் மனைவி.  அவர்களுக்கிடையே மிகவும் நெருக்கமான, மிகவும் கள்ளங்கபடமில்லாத நட்புதான். அவர்கள் இருவரும் எல்லாவிதமாக தலைப்புகள் சம்பந்தப்பட்ட கதைகளையும் பேசுவர். இப்படியிருக்க, ராஜா அதை எப்படி ஏற்றுக்கொள்வான்? ஒருமுறை ராஜா,நேரடியாகவே கவிதாவிடம், அவர்கள் இருவரும் இப்படி நெருங்கி பழகுவது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். கவிதாவும் அதை ஏற்றுக்கொள்வதாக கூறிவிட்டாள். ஆனால், நட்பை எப்படி முறிப்பது. அதனால், விஜயுடனான நட்பைத் தொடர்ந்தாள். அன்று முதல் அவள் மனதில் குழப்பமும் அச்சமும் எழுந்தது. விஜய் அனுப்பும் குறுஞ்செய்திகளை ராஜாவிடம் மறைத்தாள். ஆனாலும் விஜய்-கவிதா இடையில் எவ்விதமான கெட்ட எண்ணங்களும் கிடையாது. அவர்களுக்குள் இருப்பது, பாவம், ராஜாவுக்குப் பிடிக்காத நல்ல நட்புதான். ஆக, இவ்விசயத்தில் கவிதா கணவனுக்கு துரோகம் செய்கிறாளா இல்லையா? ஒரு நாள் ராஜாவுக்கு விஷயம் தெரியவர, அவர்களுக்குள் பூகம்பமே மூண்டது.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கும். அவ்வகையிலே, என்னுடைய கருத்து... நம்முடைய வாழ்க்கை துணை என்னும் நபர் நம் வாழ்வு முழுக்க நம்முடன் வரப்போகும் ஓர் ஆள். நம் வாழ்க்கைத் துணை எவ்விதமான குணாதிசயங்களைக் கொண்டவர் என்று நாம் தெரிந்து வைத்து கொள்ளுதல் மிக அவசியம். அப்படியிருக்க, அவருக்கு பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் நாம் அறிந்து கொள்ளத்தான் வேண்டும். நட்பைக் கூட புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு எவ்வளவு கல்நெஞ்சம் இவருக்கு/ இவளுக்கு...என்று சலித்துக்கொள்ளும் அன்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த காலச்சூழல் அவ்வாறானது. நடப்பதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது, எதுவேண்டுமானாலும் நிகழலாம் என்றே தோன்றும் சாத்தியமும் உள்ளது. மேற்கண்ட கதையில், வாழ்க்கைத் துணை மீது கொண்ட பாசமும், நம்மை விட்டுச் சென்று விடுவாரோ என்ற அச்சமும்தான் ராஜாவிடம் இருக்கிறது என நான் கருதுகிறேன். மாறாக, கவிதா மீது சந்தேகம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அதே வேளையில், கவிதா தன் கணவனிடம் தங்கள் நட்பைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்லி, அவருடன் கலந்துரையாடியிருக்க வேண்டும். விஜயிடம் இருந்து வந்த குறுஞ்செய்திகளை அவனிடம் காண்பித்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத காரணத்தில்தான் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. கணவன் மனைவி இடையே ஒரு மூன்றாம் நபரால் / நண்பர்களால் பூசல்கள் ஏற்படுவது விரும்பதகாத ஒன்றாகும். எந்த ஒரு விஷயத்தையும் துச்சமென கருதாமல், கணவன் மனைவி இருவரும் கலந்துரையாடி, பகிர்ந்துக்கொள்வதே சிறப்பு.  காதலர்களிக்கிடையேயும் சரி, கணவன் மனைவி இடையேயும் சரி, காற்றளவு கூட எந்த விஷயமும் மறைக்கப்படக்கூடாது. "transparent".. தெள்ளத் தெளிவாக ஒருவர் மற்றொருவருடன் பழக வேண்டும்.அப்பொழுதுதான் வாழ்க்கை சிறக்கும். 

அதேவேளையில்,கணவன் மனைவி இருவரில் ஒருவர் தவறு செய்து விட்டால், அவரை அடியோடு தூக்கி எறிவது என்பது சரியான முடிவல்ல. ஒருவருக்கு வழங்கப்படும் இரண்டாவது வாய்ப்பு என்பது, அவருடைய வாழ்க்கையை மாற்றியமைக்கவல்லது. 

No comments:

Post a Comment