Thursday, 7 March 2013

எண்ணம் போல் வாழ்வு...



நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்... என கூறுவர். இது நூற்றுக்கு நூறு உண்மை. இரண்டு வருடங்களுக்கு முன்பு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல், வேலை பளு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். எதைப் பார்த்தாலும் சளிப்பு, எரிச்சல், கோபம், துவண்டு போதல் என எல்லாவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் என்னுள் அடிக்கடி வந்து போகும். சக ஊழியர்களுடன் தகராறெல்லாம் செய்திருக்கிறேன் என்றால் பாருங்களேன். இறைவன் புண்ணியத்தில், அந்த சக ஊழியர்கள் மிகவும் முதிர்ச்சியுடன் நடந்து கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி நாட்கள் உருண்டோடிக் கொண்டிருக்க, என்னுள் சில மாற்றங்களை உணர்ந்தேன்... மன உளைச்சல் காரணமாக தூக்கமின்மை, அதிகளவில் உணவை உட்கொள்வது, வாகனத்தை வேகமாக செலுத்துவது என அனைத்திலும் ஒருவித கோபத்தைக் காண்பித்தேன். என்னுடைய இந்தப் பிரச்சனையை, அன்புள்ளங்கள் இருவர் நன்கே புரிந்துக் கொண்டனர். மற்றொரு இடத்தில் என்னுடன் பணிபுரியும் உடன்பிறவா சகோதரர்கள்தான் அவர்கள். பெயரை வெளியிடவிரும்பவில்லை. (தாரணி, கார்த்திக் என்ற புனைப்பெயரைச் சூட்டியுள்ளேன்.) தாரணி, கார்த்திக் இருவருமே ஒருவகையில் என்னைப் போன்றே பணியிடங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை எதிர்நோக்கி கொண்டிருந்தனர்.
ஒரு முறை நாங்கள் மூவருமே ஒரே அட்டவணைப்படி(same shift) வேலைக்கு வந்திருந்தோம். வேலை நேரம் போக ஓய்வு நேரத்தில் தேநீர் அருந்திக்கொண்டு அளவாவிக் கொண்டிருந்தோம். தாரணி அப்போது அவர் கலந்துக்கொண்ட ஆன்மீக வகுப்புக்களைப் பற்றி எங்களிடம் பேசினார். அந்த ஆன்மீக வகுப்புகளில் குருக்கள் வலியுறுத்தியது ஒரே ஒரு விஷயத்தைதான். அந்த ஒரு விஷயத்தில்தான் நம் வாழ்க்கையும், நம் உலகமும் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவாக சொன்னார் தாரணி. ஆக்ககர சிந்தனை (positive thoughts)- என்பதுதான் அது. இது இந்து மதத்தில் யாரும் சொல்லாமல் இல்லை. இருப்புனும் இதுவரை நான் உணரவில்லையே என்றே தோன்றியது. அப்பொழுதுதான் அவர், 'THE SECRET' எனும் புத்தகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் ஆங்கிலத்தில் இருப்பதால் அந்தப் புத்தகத்தைப் படிக்க எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் கார்த்திக் ஒரே நாளில் அந்த புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டு, அதிகாலையில் தாரணிக்கும் எனக்கும் ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். "எனக்கு இந்த புத்தகத்தின் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா" என்று! படித்தவுடன் மனம் நெகிழ்ந்தது. அந்த புத்தகத்தின் மீதான ஆர்வம் மேலோங்கியது. நானும் அதை வாங்கி படிக்க தொடங்கினேன். படிக்க படிக்க வாழ்க்கை பிடிக்க தொடங்கியது. அப்புதகத்தின் முதன்மை கருத்தே, நம் எண்ணம் போலவே வாழ்க்கை அமையும் என்பதுதான். அன்று முதல் ஒவ்வொரு நாளும் எனக்கு புதியதாய் தோன்றியது. ஒவ்வொரு நாளும் புன்னகையுடன் தொடங்கியது. இந்த நாள் இனிய நாள் என்ற எண்ணம்தான் கண்விழிக்கும்போது சிந்தனைக்கு வரும். நாள்கள் அதுபோலவே இனிதாகின.

"சொலறதுக்கு நல்லாதான் இருக்கும்!" என்று பலர் நினைக்கலாம். ஆனால் பொய் சொல்லவோ, தவறான கருத்துக்களைப் பறிமாறிக் கொள்ளவோ நான் இதை எழுதவில்லை. அனுபவித்த சுவாரிசியத்தை எழுதுகிறேன். வாழ்க்கையில் மாயங்கள்-magic நடப்பதை உணர்ந்தேன். மன உளைச்சலை ஏற்படுத்திய பழைய வேலையை விட்டு விட்டு, எனக்கு பிடித்த, நீண்ட நாள் ஆசைப்பட்ட வேலையில் சேர்ந்தேன். இந்த மாற்றம் என் வாழ்வில் முன்பே நிகழ்ந்திருக்கலாமே? ஏன், நான் இந்த புத்தகத்தைப் படித்து தெளிந்த பிறகு நடக்க வேண்டும்? "Everything happens for a reason"... நடப்பவை அனைத்துக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கவே செய்கிறது... மாயஜால உலகமப்பா!!!

அவ்வேளையிலே, தாரணிக்கும் பல பிரச்சனைகள் படமெடுத்தன. இருப்பினும் இரும்பு பெண்மனியான அவர், அனைத்தையும் துச்சமென எண்ணி, ஒரு திடமான எண்ணத்தை வளர்த்து கொண்டார். இப்பொழுது அனைவரும் நலம் விசாரிக்கும் அளவுக்கு ஒரு நல்ல வேலைக்குச் சென்று விட்டார். எங்கள் கூட்டணியில் இருந்து ஒருவர் பிரிந்துச் சென்றுவிட்டார். இருப்பினும், நட்புக்கு தூரம் ஒரு தடையே இல்லை என்பதையும் எங்கள் எண்ணத்தில் விதைத்து கொண்டோம். எங்கள் எண்ணம் போலவே இதுவரையில் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


இவ்வேளையிலே நான் படித்த ஒரு கவிதை நினவுக்கு வருகிறது....


எண்ணங்களன்றி வேறேதுமில்லை
என்னிடம்!
எண்ணங்களும் இல்லாது போகும் நாளில்
கூடாய், காற்றாய், வெறும் புகையாய்
ஆவேன்!


ஒரு மனிதனை வாழ்க்கையில் இட்டுச் செல்வதே எண்ணங்கள்தான். எண்ணங்கள் இல்லையென்றால் உயிரற்ற எலும்புக்கூடாய், வெறும் புகையாய் ஆவான் மனிதன் என்பதை சிறப்புறச் சொன்ன இந்த கவிதை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது...கீதாசாரத்தில் சொல்லப்பட்டது போல, அனைத்தும் நம் எண்ணம் போல்தான் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பது உண்மை. 

இந்த புத்தகங்களை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ வாங்கி படித்து அனைவரும் பயன்பெற வேண்டுமென்பதே என்னுடைய அவா... இதன் மூலம் எண்ணம் போல் வாழ்வு அனைவருக்கும் கிட்டும்..என் நண்பர்களும் இதன் மூலம் பயன்களை அனுபவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்......இவ்வேளையிலே இந்த புத்தகத்தையும், நல்ல / ஆக்ககர சிந்தனைகளை எனக்கு எடுத்துணர்த்திய உடன்பிறவா சகோதரி தாரணிக்கு நான் நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

4 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. உண்மை, ஒரே எண்ணம் வேண்டும். அதில் தின்னம் வேண்டும்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete