
பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் பெரும்பாலான பெற்றோர்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால் சில பிள்ளைகளுக்கு மட்டும்தான் பெற்றோர்களூக்குத் திருமணம் செய்தி வைத்துப் பார்க்கும் காட்சியும் பாக்கியமும் கிட்டுகிறது... அந்த வகையில் நான்...நாங்கள்.... பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அண்மையில், எங்கள் பெற்றோரின் மணிவிழாவைக் கொண்டாடினோம், மிகவும் சிறப்பாக! அப்பாவுக்கு 60 வயது பூர்த்தியடைந்து அன்றோடு மூன்று நாட்கள் பூர்த்தியாகியிருந்தது. அம்மாவின் முகத்தில் கல்யாண கலை ஊஞ்சல் ஆடியது... நெற்றியில் நிறைந்த குங்குமம், தங்கப்பட்டை, இருவரின் கழுத்தில் மாலைகள்...அம்மா மிகவும், பொழிவுடன், அங்கிருந்த இளம்பெண்களைக் காட்டிலும் மிகவும் அழகான தேவதையாக வலம் வந்தார். அப்பாவுக்கு 60 வயதா என்று பலர் கேள்வி கேட்க, சிரித்து கொண்டே, "எங்க அப்பா எப்போதுமே இளமை..." என்று பதில் கூறி, மிகுந்த ஆரவாரங்கள், குதூகலத்துடன் திருமண நிகழ்ச்சி நடந்தேறியது. திருமணத்திற்கு முன்பும், அன்றைய தினமும், பல பிரச்சனைகள், தங்கு தடைகள் என அனைத்தும் எங்களைத் தகர்த்த முயற்சித்தன. ஒற்றுமையின் பலனாக அனைத்தையும் பிள்ளைகள் நாங்கள் அனைவரும் முறியடித்தோம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து, ஒன்று சேர்ந்து இந்த திருமணத்தை இறைவனின் ஆசியுடன் சிறப்பாக நடத்தி முடித்தோம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எதிலுமே குறைவில்லாமல் இறுதிவரை திருமண நிகழ்ச்சி களைக்கட்டியது. அப்பா அம்மா இருவருமே களம் இறங்கி நடனம் ஆடியது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. இதுவரை பெற்றவர்களுக்கு என எதுவுமே செய்யாத பிள்ளைகளாய் திகழ்ந்த எங்கள் அனைவருக்கும், அன்றைய நாள் எதையோ சாதித்த பெருமகிழ்ச்சி! பெற்றோர்களை மகிழ்வித்த ஆனந்தம். எங்கள் பெற்றோர் அனைவரையும் ஆசிர்வதிக்க நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த சிறந்த சந்தர்ப்பம் அதுவென்றே தோன்றுகிறது. எங்களைப் பொறுத்தவரை ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என் தாய்த்தந்தையர்தான். இந்த 34 வருடங்களில் இவர்களுக்குள் சண்டை சச்சரவுகளே வந்ததில்லை என்று கூறவியலாது. இருப்பினும், அடிச்சாலும் புடிச்சாலும் என் மனைவிதான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷந்தான் என்ற மனப்பான்மை அவர்களுக்குள்ளே இதுவரை இருந்து வருவதுதான் இவர்கள் இத்தனை வருடங்களாகியும் சேர்ந்து, சுபிட்சத்துடன் வாழ காரணம். இன்று பல தம்பதிகள் சிறு சிறு பிரச்சனைகளால் உடனே பிரிந்து செல்லும் முடிவுக்குச் செல்வது வேதனை அளிக்கிறது. நம் பெற்றோரிடம் நமக்கு மனவருத்தம் ஏற்பட்டால், உடனே பெற்றோரை மாற்றி விடுகிறோமா என்ன? இல்லையே, போக போக அது சரியாகி விடும் என்று வாழ்க்கையைத் தொடர்கிறோம். ஆனால், வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை எழுந்தால் மட்டும் ஏன் உடனே விட்டுச் செல்வது பற்றி சிலர் யோசிக்கின்றனர் எனத் தெரியவில்லை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறுவர். ஆனால், இறுதியில் சொர்க்கத்திற்குச் சென்று சேரும்வரை அந்த உறவு நிலைத்திருப்பதுதான் சரி என நான் கருதுகிறேன்.
No comments:
Post a Comment