பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் பெரும்பாலான பெற்றோர்களுக்குக் கிடைத்து விடுகிறது. ஆனால் சில பிள்ளைகளுக்கு மட்டும்தான் பெற்றோர்களூக்குத் திருமணம் செய்தி வைத்துப் பார்க்கும் காட்சியும் பாக்கியமும் கிட்டுகிறது... அந்த வகையில் நான்...நாங்கள்.... பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அண்மையில், எங்கள் பெற்றோரின் மணிவிழாவைக் கொண்டாடினோம், மிகவும் சிறப்பாக! அப்பாவுக்கு 60 வயது பூர்த்தியடைந்து அன்றோடு மூன்று நாட்கள் பூர்த்தியாகியிருந்தது. அம்மாவின் முகத்தில் கல்யாண கலை ஊஞ்சல் ஆடியது... நெற்றியில் நிறைந்த குங்குமம், தங்கப்பட்டை, இருவரின் கழுத்தில் மாலைகள்...அம்மா மிகவும், பொழிவுடன், அங்கிருந்த இளம்பெண்களைக் காட்டிலும் மிகவும் அழகான தேவதையாக வலம் வந்தார். அப்பாவுக்கு 60 வயதா என்று பலர் கேள்வி கேட்க, சிரித்து கொண்டே, "எங்க அப்பா எப்போதுமே இளமை..." என்று பதில் கூறி, மிகுந்த ஆரவாரங்கள், குதூகலத்துடன் திருமண நிகழ்ச்சி நடந்தேறியது. திருமணத்திற்கு முன்பும், அன்றைய தினமும், பல பிரச்சனைகள், தங்கு தடைகள் என அனைத்தும் எங்களைத் தகர்த்த முயற்சித்தன. ஒற்றுமையின் பலனாக அனைத்தையும் பிள்ளைகள் நாங்கள் அனைவரும் முறியடித்தோம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து, ஒன்று சேர்ந்து இந்த திருமணத்தை இறைவனின் ஆசியுடன் சிறப்பாக நடத்தி முடித்தோம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என எதிலுமே குறைவில்லாமல் இறுதிவரை திருமண நிகழ்ச்சி களைக்கட்டியது. அப்பா அம்மா இருவருமே களம் இறங்கி நடனம் ஆடியது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. இதுவரை பெற்றவர்களுக்கு என எதுவுமே செய்யாத பிள்ளைகளாய் திகழ்ந்த எங்கள் அனைவருக்கும், அன்றைய நாள் எதையோ சாதித்த பெருமகிழ்ச்சி! பெற்றோர்களை மகிழ்வித்த ஆனந்தம். எங்கள் பெற்றோர் அனைவரையும் ஆசிர்வதிக்க நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த சிறந்த சந்தர்ப்பம் அதுவென்றே தோன்றுகிறது. எங்களைப் பொறுத்தவரை ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என் தாய்த்தந்தையர்தான். இந்த 34 வருடங்களில் இவர்களுக்குள் சண்டை சச்சரவுகளே வந்ததில்லை என்று கூறவியலாது. இருப்பினும், அடிச்சாலும் புடிச்சாலும் என் மனைவிதான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷந்தான் என்ற மனப்பான்மை அவர்களுக்குள்ளே இதுவரை இருந்து வருவதுதான் இவர்கள் இத்தனை வருடங்களாகியும் சேர்ந்து, சுபிட்சத்துடன் வாழ காரணம். இன்று பல தம்பதிகள் சிறு சிறு பிரச்சனைகளால் உடனே பிரிந்து செல்லும் முடிவுக்குச் செல்வது வேதனை அளிக்கிறது. நம் பெற்றோரிடம் நமக்கு மனவருத்தம் ஏற்பட்டால், உடனே பெற்றோரை மாற்றி விடுகிறோமா என்ன? இல்லையே, போக போக அது சரியாகி விடும் என்று வாழ்க்கையைத் தொடர்கிறோம். ஆனால், வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை எழுந்தால் மட்டும் ஏன் உடனே விட்டுச் செல்வது பற்றி சிலர் யோசிக்கின்றனர் எனத் தெரியவில்லை. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று கூறுவர். ஆனால், இறுதியில் சொர்க்கத்திற்குச் சென்று சேரும்வரை அந்த உறவு நிலைத்திருப்பதுதான் சரி என நான் கருதுகிறேன்.
கோமதி... 23 வயது நிரம்பிய ஓர் இளம்பெண். வர்த்தக துறையில் பட்டப்படிப்பு
முடித்து வேலைத் தேடி கொண்டிருந்தாள். தோட்டப் புறத்தில் பிறந்து வளர்ந்த அவள், சிறப்பான மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றாள். வீட்டில்
கடைக்குட்டி. அப்பாவின் காப்புறுதி நிறுவன வர்த்தகம் மூலம் குடும்பம் நடந்தது.
அண்ணன் அக்காள்கள், திருமணமாகி அவரவர்
வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். கோமதியின் எதிர்கால லட்சியமே ஒரு சிறந்த, உயர்வருமானம் பெறும் நிறுவனத்தில் பணியாற்றுவதுதான். அம்மா எப்போதுமே சொல்வார்..
"அப்பாக்கூட அலுவலகத்துக்குப் போய் வேலையை பழகிக்கோம்மா. நாளைக்கு ஆபத்து அவசரத்துக்கு, அந்த வேலைய நீ பார்த்துக்கலாமே..." என்று. “இந்த கம்பத்துல தங்கி, நான் வேலை செஞ்சா என்னால
சம்பாரிக்க முடியாதும்மா. நான் நிறைய சம்பாதிக்கணும். வேணும்னா தேவிகாவெ போக
சொல்லுங்களேன்". தேவிகா கோமதியின் மூன்றாவது அக்காள். அரசாங்க துறையில்
பணிபுரியும் அவளுடன், கோமதி எப்போதுமே
ஏட்டிக்குப் போட்டி செயல்படுவதுண்டு..
"அக்கா அரசாங்கத்துல வேலை
செய்றா, அவள ஏன் தொந்தரவு பண்ணனும்? நீ இப்போதைக்கு சும்மாதனம்மா இருக்க,
வேலை கிடைக்கரவரைக்குமாவது
அப்பாவுக்கு ஒத்தாசையா இருக்கலாமே" என்று அம்மா கூற... "இப்போ நான்
வீட்டில தண்டச்சோறுன்னு சொல்றீங்களா? எப்பவுமே தேவிகாவைத்தான்
உயர்த்தி பேசுவீங்க. நான் நாளைக்கு அண்ணன் வீட்டுக்குப் போறேன். இண்டர்வியூ
இருக்கு" என்றாள் அம்மாவிடம் கோபமாக. ஒவ்வொரு வாரமும்
கோலாலம்பூரிலுள்ள அண்ணன் வீட்டிற்குச் சென்று தங்கி, நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வது கோமதியின் வழக்கம். நேர்முகத்
தேர்வுகளுக்கான முடிவுகள் சில சமயங்களில் பாதகமாகவும், பல சமயங்களில் சாதகமாகவும் வரும். கிடைத்த வேலையைக் கோமதி பரிசீலித்துப் பார்ப்பாள்.
"சம்பளம் குறைவா இருக்கு, வீட்டில இருந்து தூரம்மா...
வேலை நேரம் சரியில்ல, " என்று அம்மாவிடம் ஆயிரம்
காரணங்கள் கூறுவாள். அவளுக்குப் பிடிக்காத சில அம்சங்கள் அந்த வேலைகளில் இருக்கும், இப்படியாக இதுவரை கிடைத்த 16 வேலை வாய்ப்புக்களைத்
தூக்கியெறிந்தாள் கோமதி. ஒரு நாள் மூத்த அக்காளுக்கு
இவளின் போக்கு சினமூட்டவே, "நீ என்னதான்
நினைச்சுக்கிட்டு இருக்க கோமதி? கிடைக்கற வேலையையும் செய்யல, செய்ய சொல்ற வேலையையும் உனக்கு பிடிக்கல. என்ன செய்றதான் உத்தேசம்?"
கோமதிக்கு எரிச்சல், கோபம், ஆத்திரம் எல்லாமும் ஒன்றாக
திரண்டு வந்தது. தான் எதைச் செய்தாலும், அனைவரும் தப்பாகத்தான்
நினைப்பார்கள் என்று மனதுள் நினைத்துக்கொண்டாள். விரைந்து முடிவொன்று எடுக்க வேண்டும் என்று
கருதி, தனக்கு கிடைத்த வாடிக்கையளர் சேவை மைய வேலைக்குச்
சேர்ந்தாள். வேலையிடத்தில் அனுபவத்துக்குத்தான் முன்னுரிமை என்பதை முதலாளி
தெள்ளத்தெளிவாகச் சொல்லி விட்டார். எப்படியும் இன்னும் இரண்டு வருடங்கள் இங்கு
தொடர்ச்சியாக வேலை செய்தால்தான் அனுபவமும் நல்ல சம்பளமும் கிட்டும். வீட்டில்
விஷயத்தைச் சொன்னாள் கோமதி. "இப்படி மற்ற இடத்துல
குறைவான சம்பளத்துக்கு வேலை செய்றதவிட, நீ அப்பாக்கிட்ட வேலையைக்
கத்துக்கிட்டு, நல்ல வருமானத்தைப்
பார்க்கலாம்மா..." என்று மறுபடியும் அம்மா பேச்சை தொடங்கினார்."அப்பாவுக்கும்
வயசாகுது கோமதி. ஆரம்பக்காலத்துல இருந்து அப்பா இந்த தொழில செய்றாரு. இது அவரோட
நின்றுவிடக்கூடாது. நீ இதுல தலையெடுக்கணும். அதுதான் எங்க ரெண்டு பேரோட
ஆசை.." அம்மாவின் பேச்சு கோமதிக்கு
நச்சரிப்பாக இருந்தது. "எப்போதுமே என்னோட முடிவுக்கு ஓகே சொல்லவே மாட்டிங்க.
எனக்கு கோலாலம்பூரிலதான் வேலை செய்யணும். அங்கத்தான் நான் நிறைய சம்பாதிக்க
முடியும். என்ன புரிஞ்சிக்கங்க." கோமதி வேலைக்குச் சேர்ந்த
இடம் ஒரு தனியார் நிறூவனமாகும். அங்கு பலவிதமான விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
அவற்றுள் ஒன்று, முதல் ஆறு மாதங்களுக்கு
பயிற்சி அடிப்படையில் வேலை செய்யவேண்டும் என்பது. மற்றொன்று அட்டவணை முறைப்படி
வேலை செய்ய வேண்டும். புதியதாக சேர்ந்தவர்கள் கண்டிப்பாக இரவு நேர அட்டவணையில்தான்
இணைக்கப்படுவர். இப்படியிருக்க கோமதி தினமும் இரவு வேளைகளில் வேலைக்குச்
செல்வதற்கு போக்குவரத்து இன்றி சிரமப்படலானாள். தினமும், அக்காள், அண்ணன், நண்பர்கள் என அனைவரையும் எதிர்ப்பார்த்துக்கொண்டுதான் வேலைக்குச்
செல்ல நேர்ந்தது. அதனால் அதிருப்தியடைந்தாள் கோமதி. தனக்கென ஒரு கார் வாங்கவேண்டும் என எண்ணினாள்.
இப்போதைக்கு ஒரு பகுதி நேர ஊழியராக இருக்கும் கோமதிக்கு, கார் வாங்குவது சற்று சிரமமாகவே இருந்தது. குறைந்த வருமானம் பெறும்
கோமதி எப்படி காருக்கான மாத தவணையைச் செலுத்துவாள் என்று அப்பா கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், அவளுடைய பிடிவாதத்தினால், கார் வாங்கலாம் என்ற எண்ணத்துக்கு,
பெற்றோரிடமிருந்து
பச்சை சமிக்ஞை கிடைத்தது. அப்பாவின் முயற்சியினால்
கோமதிக்கு காருக்கான வங்கி கடன் கிடைத்தது. இரண்டு வாரங்களில் அவள் கார் வாங்கும்
கனவு நிஜமானது. காரில் வேலைக்குச் செல்ல தொடங்கினாள் கோமதி. ஒருநாள் நல்ல அடை மழை.
கோமதி விடியற்காலை 3 மணிக்கு வேலை முடிந்து
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அளவான வேகத்துடன் காரைச் செலுத்திக்
கொண்டிருந்தாள். மழையின் காரணமாக சாலையை சரிவர பார்க்க இயலாமல் கோமதி ஒருப்புறம்
திண்டாடவே செய்தாள். மனதில், நல்ல மழை வருது, வீட்டுகுப் போய் நல்லா துங்கலாம், என்று எண்ணிக்கொண்டே
கொட்டாவி விட்டாள். "டமார்" என்ற ஒரு சத்தம். என்ன நடந்தது, சத்தம் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் யோசிக்க முடியாத ஒரு தருணம்.
உடல் முழுக்க வலி. காரின் பிரேக்கை அழுத்த முடியவில்லை. காரணம் கால் அங்கு இல்லை
என்பது மட்டும்தான் தெரிந்தது. சாலையின் மறுபுறமிருந்த ஒரு லோரி தன் காரை
மோதிவிட்டது என்று கூட்டத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். வலியால் துடித்துக்கொண்டே
கோமதி கண்விழித்து அக்கம் பக்கம் பார்த்தாள். காரை விட்டு வெளியே விழுந்து கிடக்கும்
தன்னைச் சுற்றி, போலீஸும் சில மக்கள்
கூட்டமும் இருப்பதை உணர்ந்தாள். மழை கொட்டிக்கொண்டிருக்க
உடலில் ஏற்பட்ட காயங்கள் எரிய தொடங்கின. வலி தாங்க முடியாமல் மயங்கினாள் கோமதி. அடுத்தநாள்
கண்விழித்துப்பார்த்த போது, மருத்துவமனையில் அவளைச் சுற்றி
குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர்.
"ஒன்னும் இல்லம்மா, சின்ன காயம்தான், சரியாகிடும்" என்று அம்மா விம்மிக்கொண்டே சொன்னார். கோமதி
படுக்கையிலிருந்து எழ முற்பட்டாள். எழ முடியவில்லை அவளாள். கால்கள் இரண்டுக்கும்
கட்டுப்போடப்பட்டிருந்தது. பலந்த காயங்களுக்கு இலக்காகிய கோமதிக்கு மூன்று முதல்
நான்கு மாதங்கள் வரை ஓய்வு தேவைப்பட்டது. அந்த விபத்தில் சிக்கி தனது இடதுக்கை விரலையும் கோமதி
இழந்தாள். அவளது எண்ணங்கள் ஏதேதோ
சிந்திக்கத் தொடங்கின. நான்கு மாதங்கள் வேலைக்குச் செல்ல இயலாது. காருக்கான மாத தவணையை
எப்படி செலுத்துவது? விரல் போச்சே, திருமணமாகும் போது அந்த விரல்தானே மோதிரத்தை வாங்கிக் கொள்ளும், இப்போது அது இல்லையே... என்றெல்லாம் அவள் எண்ணங்கள் அலைபாய்ந்தன.
விரக்தியின் உச்சியில் இருந்தாள் கோமதி. பெற்றோர் அவளை வீட்டிற்கு அழைத்துச்
சென்று பார்த்துக் கொண்டனர். கோமதியின் அம்மா, அவளை குளிப்பாட்டுவது, உடை அணிவது என, சிறுமியாய் இருந்தபோது
கோமதியை எப்படி கவனித்துக்கொண்டாரோ, அதே போல் கவனித்துக்
கொண்டார். தேவிகா, அன்றிரவு கோமதியிடம் பேசினாள். "பெரியவங்க சொன்னா அதுக்கு ஓர்
அர்த்தம் இருக்கும் கோமதி. நீ அப்பாவோட பிஸ்னஸ கவனிச்சுக்கிட்டு இங்கேயே சந்தோஷமா
இருந்திருக்கலாம். இப்ப என்னாச்சு பார்த்தியா. அம்மாவும் அப்பாவும் உன்னை இப்படி
கவனிச்சுக்கறாங்களே, நாளைக்கு அவங்களுக்கு
ஏதாவது ஒன்னுன்னா நீ எப்படி கவனிப்பே? இதுக்கெல்லாம் என்ன கைமாறு
செய்ய போறே? அவங்க ரெண்டு பேரோட சொத்தே
அந்த பிஸ்னஸ்தான். அவங்களோட கடைசி காலம் ரொம்ப தூரத்தில இல்ல. உனக்கே புரியும்னு
நினைக்கிறேன்.." "ஏன் தேவிகா நீயே அந்த
பொறுப்பை எடுத்துக்கலாமே, ஏன் என்னை செய்ய சொல்றே?" என்று கோமதி அக்காளுக்கே தூண்டில் போட்டாள்.
"கோமதி, நான் படிச்ச துறைக்கான வேலை எனக்கு கிடைச்சாச்சு, அதுவும் அரசாங்க உத்யோகம். அந்த வேலைய விட்டுட்டு நான் இங்க வரணும்னு
அப்பா அம்மா விரும்பல. பிள்ளைங்க எப்போதும் நல்லா இருக்கனும்னுதான் பெத்தவங்க
நினைப்பாங்க. நீ அப்பா பிஸ்னஸ எடுத்து நடத்துனா,
கண்டிப்பா
நல்லா வருவே. அதுமட்டும் இல்லாம, யாராவது ஒரு ஆள் அம்மா
அப்பா கூட இங்க இருந்தா, அவங்களுக்கு ஆறுதலா
இருக்கும். அப்பாவும் கொஞ்சம் ஓய்வு எடுத்துப்பாரு" தேவிகாவின் உபதேசத்தைக்
கேட்க கேட்க கோமதிக்கு எரிச்சல் கிளம்பியது. அப்பாவின் தொழிலை ஏற்று நடத்தும் எண்ணம் அவளுக்கு
கொஞ்சம் கூட இல்லை. இரண்டு மாதங்கள் கழிந்தன.
கோமதி ஓரளவு குணமானாள். அம்மாவின் கவனிப்பும் அக்கறையும் அவளை திடகாத்திரமாக்கின. தெளிவான, புதிய சிந்தனையுடன் காணபட்டாள் கோமதி.
ஒரு நாள் இரவு நல்ல துயில்
கொண்டிருந்த அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு துடிக்க ஆரம்பித்தார். மாரடைப்பு.
இரண்டாவது "attack" என்று மறுநாள் மருத்துவ
பரிசோதனையில் தெரிய வந்தது. அனைவரது சந்தோஷமும் சோக கடலில் மூழ்கியது. மருத்துவர் கூறியதாவது :
"எப்ப வேணும்னாலும் அவருக்கு அடுத்த, மூன்றாவது attack வருவதற்கான வாய்ப்பு இருக்கு. நல்லா கவனிச்சுகங்க. வேலைக்குப்
போறதெல்லாம் கொஞ்ச நாளைக்கு வேணா. முடிஞ்ச அளவு அவர் வேலையிலெ இருந்து ஓய்வடைஞ்சா
அவர் ஆரோக்கியத்துக்கு நல்லது.." அனைவருக்கும் பகீரென்று ஆனது. அப்பா ஒருத்தரோட
சம்பாத்தியத்துலத்தான் அம்மா, கணவனைப் பிரிந்த அக்காள், அக்காள் பிள்ளைகள் இருவர், தத்து பிள்ளை ஒருத்தன் என
அனைவரும் வாழ்கின்றனர். தேவிகா, பேசத் தொடங்கினாள். "அப்பா, இனிமேல் நீங்க ஓவீஸ் போக
வேண்டா. எல்லாத்தையும் இனி நான் பார்த்துக்கறேன். நீங்க வீட்டுல நல்லா
ஓய்வெடுங்க.." "அப்போ உன்னோட அரசாங்க
உத்யோகம் எப்படிம்மா?" என கேட்டார் அம்மா. "அது போகட்டும் மா, இப்போதைக்கு அப்பா நல்ல ஓய்வெடுக்கனும், அதுதான் முக்கியம்..." "
தேவிகா, அரசாங்க உத்யோகம் சுலபமா யாருக்கும் கிடையாது. கிடைத்த வாய்ப்பை நீ
ஏன் நழுவ விடற. ஓவீஸ நானே பார்த்துக்கறேன் மா... நீ அந்த வேலைய விட்டுடாதே. அதுல உனக்கு நல்ல
எதிர்காலம் இருக்கும்மா... வயசான காலத்துல, இன்னும் கொஞ்சம்
நாள்தானே... என்னாலே இன்னும் வேலை செய்ய
முடியும்... யாரும் என்னைப் பத்தி கவலைப்படாதீங்க..." என்றார் அப்பா...தேவிகா ஏதும் சொல்வதறியாது நின்றாள். அப்பாவுக்கு எப்படி உதவி புரிவது என்று எண்ணிக்கொண்டிருந்தாள். கோமதியாவது மனம் மாறி, இதற்கு ஒரு முடிவைக் கட்டுவாள் என்று எதிர்ப்பார்த்தாள். மறுநாள் காலையில் கோமதி மிக
உற்சாகத்துடன் கோவிலுக்குச் சென்று வீடு திரும்பினாள். அப்பா, உடல்நலம் கருதி, அன்று விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தார். தேவிகாவும் அன்று விடுப்பில்தான்
இருந்தாள். அப்பாவைக் கவனித்துக் கொள்ள கூடுதலாக இரண்டு நாள்கள் வீட்டில் இருந்தாள். கோமதி
வீட்டினுள் நுழைந்ததுமே, "இன்னிக்கு எல்லாருக்கும்
ஒரு நல்ல செய்தி சொல்லப்போறேன்... எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சாச்சு..."
என்றாள். அந்தச் செய்தியைக் கேட்டு யாருக்கும் மகிழ்ச்சி வெள்ளம் ஒன்றும்
பொங்கவில்லை. பெற்ற கடனுக்காக அம்மா, "நல்லதும்மா... எங்க
வேலையிலே சேர்ந்திருக்கே?" எனக் கேட்டார். "தெரிஞ்ச இடம்தான் மா...
சம்பளம் குறைவா இருந்தாலும், மனசுக்கு நிறைவான ஒரு
வேலை... நான் அந்த வேலைக்குப் போறதாலே நிறைய பேருக்கு சந்தோஷம் கிடைக்கும் மா...
அதனால அப்பாவுக்கு ஓய்வு கிடைக்கும் மா..." என்று அவள் கூறி
முடிப்பதற்குள்... அம்மாவின் கண்களிலிருந்து மளமளவென கண்ணீர்..."உண்மையதான்
சொல்றியாம்மா...." என்று ஆனந்த வெள்ளத்தில் மிதந்த்தார் அந்த அன்புத்தாய். வீட்டில் அனைவருக்கும்
அபப்டியொரு மகிழ்ச்சி... அப்பாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. தனது
வர்த்தகத்தைத் தொடர தன் மகள் தலையெடுத்து விட்டாள் என மனதினுள் ஆனந்த தாண்டவம்.
இதன் மூலம் தன் மகள் ஒரு சிறந்த தொழிலதிபராக உருவெடுக்க வேண்டும் என வாழ்த்துக்
கூறினார் அப்பா. பிள்ளைகளுக்காக பெற்றோர்கள்
வாழ்ந்த காலம் போக, இப்போது பிள்ளைகளும்
பெற்றோருக்காக வாழ்ந்தால்தான் என்ன என்ற சிந்தனையை கோமதி வளர்த்துக்கொண்டாள்.
துவண்டு, அடிப்பட்டு கிடந்த தன்னை
சிறுபிள்ளைப் போல் உபசரித்து பாதுகாத்த பெற்றோருக்காக இதைக்கூட செய்யவில்லை
என்றால், தான் வளர்ந்து படித்து, வளர்ந்து என்ன பயன் என்று தனக்குள் கேள்விக் கேட்டுக் கொண்டாள். இனி,
தன் மூலம் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, துக்கப்படக்கூடாது என சபதம்
எடுத்துக் கொண்டாள் கோமதி.