பொதுவாக பெண்ணாய் பிறந்தவர் எவரும், கணவருடைய சுவடுகளை பின்தொடர்ந்து சென்று, அவர் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றே நினைப்பர். நான் பார்த்து பழகிய பெண் நண்பர்கள் அப்படிதான். சுருங்க கூறின், கணவனின் இலக்கே தமது இலக்கு என்பதே.
பெரிய கார் வாங்க வேண்டும், பங்களா வாங்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும், இப்படி பட்ட ஆசைகளும் இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு இந்த ஆசைகளெல்லாம் எங்கோ சென்று ஒளிந்து கொள்கின்றன.
ஓரிரு ஆண்டுகளில் குழந்தைகள், மாமியார், மாமனார், பிறகு சொந்த குடும்பம் என பெண்களின் வாழ்க்கை ஓய்வின்றி ஓடிகொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் என்றால் பேச்சே இல்லை. அதிகாலை எழுந்து, வீட்டில் கணவன், குழந்தைகளின் தேவையை முடித்து, வாகனத்தை நெரிசலில் செலுத்தி வேலைக்குச் சென்று சேர்ந்து, முதலாளியிடம் வாங்கி கட்டிகொண்டு, வேலை முடிந்து வீடு திரும்பும்போது கையோடு கடைக்குச் சென்று சமையலுக்குத் தேவையான சாமான்களை வாங்கி கொண்டு, வீட்டிற்கு வந்து சமைத்து முடிப்பதற்குள் இரவு மணி 8-ஆகி விடும். பின் குளித்து, கூந்தல் முடிந்து, சாமி விளக்கேற்றி, குழந்தைக்கு உணவூட்டி, கணவனுக்குப் பணிவிட செய்து, படுக்கைக்குச் சென்று துயிலுறங்கும் போது மணி நள்ளிரவு 12. இடையில் உண்ட பாத்திரங்களைக் கழுவி வைத்தல், வீடு பெருக்குதல், துணி துவைப்பது... இதில் அவர்களுக்கென எங்கே இருக்கிறது நேரம்?
இறுதிவரை கணவன் கன்ணுக்குத் தேவதையாய் தோற்றமளிக்க வேண்டும்.. இதற்கு முயற்சி எடுத்தாலொழிய நிச்சயம் நடக்காது. 24 மணி நேரம் இருந்தும் இந்த பெண்களுக்கு மட்டும் நேரம் பற்றாக்குறை நிலவுகிறதே...
சரி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தால்? அப்போது கணவனிடமே காசை எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருக்கும் நிலைமை வந்துவிடும். சில கணவர்கள் சில வேளைகளில் சொல்லிக் காட்டி விடுவார்கள். சில நேரங்களில், தெய்வம் சும்மா இருந்தாலும் பூசாரி விடமாட்டான் என்பதுபோல, வீட்டில் உள்ள 'அன்பு சொந்தக்காரர்கள்' எதையாவது சொல்லி தூண்டிவிடுவர்.
பெண்ணாய் பிறந்தால் இதுதான் கதி என்றே நினைக்கத் தோன்றுகிறது. எத்தனை 'மனதில் உறுதி வேண்டும்', '36 வயதினிலே' போன்ற படங்கள் வந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சமூகமும், குடும்ப கடப்பாடும் சில வேளைகளில் முட்டுக்கட்டையாகத்தான் இருக்கின்றன. பெண்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கணவனும் அவளின் நிலைமையை, உணர்ச்சியை, மதிப்பை உணர்ந்து அவளுக்கு வழிகாட்ட வேண்டும். தன் மனைவி உயர்வதால் தமக்குத்தான் பெருமை என்ற மனநிலை உருவாக வேண்டும்.
நம் சமூகத்தில் பெண்ணின் நிலை மாற வேண்டும். சமயல் அறை, வீடு, அலுவலகம் என்றோடு நின்றுவிடாமல், உலகளவில் பெண்களின் நிலையும் சக்தியும் ஓங்க வேண்டும். அதற்கு கணவர்களின் ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மிக அவசியம். கணவன்மார்களே, உங்களுக்காக வாழும் ஓருயிரை, அவர்களுக்காகவும் வாழவேண்டும் என எடுத்துரையுங்கள். வாழும் காலங்களில் இருவரும் சேர்ந்தே வாழ்க்கையை ரசித்து செல்லுங்கள்...
அவ்வகையில் என் கணவன் என் தோழன் என்றுதான் சொல்ல வேண்டும். என் வாழ்க்கையையும் அவர் வாழ்க்கையையும் வண்ணமயமாக்கி ரசித்துச் செல்ல வாய்ப்பை வழங்கியவர். சாதிக்க தூண்டும், சம உரிமை வழங்கும் கண்-அவன்.
இறைவனுக்கு நன்றி...